கர்நாடகாவில் கனமழை: "நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது" - சித்தராமையா!
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 24ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5-வது நாளான நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, சுள்ளியா, புத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் ஆறுகளின் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததுடன், மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்து பெரும் சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,
"கர்நாடகாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் 170 தாலுகாக்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 30, 31ம்தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். வெள்ளம் ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க ஏதுவாக 2 ஆயிரத்து 296 நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.