மெக்சிகோவை புரட்டி போட்ட கனமழை - 28 பேர் உயிரிழப்பு!
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாடு அருகே பசுபிக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'ரேமண்ட்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, அந்நாட்டின் குவாரடிரோ, ஹிடல்கோ, வெரகுரூஸ், சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மெக்சிகோவில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, 'ரேமண்ட்' புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.