கனமழை எச்சரிக்கை - 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் !
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மார்ச் 1ஆம் தேரிதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும் என்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது".