தென் மாவட்டங்களை மிரட்டும் கனமழை | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும்.
4 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் இருந்து தலா 90 வீரர்களும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 50 வீரர்கள் கொண்ட தலா 2 குழுக்களும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
4 மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மழை அளவு மற்றும் நீர்வரத்து ஆகியவற்றை கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.