கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தூத்துக்குடியில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அம்மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத்தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,
“தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச. 05) பரவலாக நல்ல மழை பெய்து வருவதாலும் நாளை (டிச. 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.