தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 4 ரயில் சேவைகள் ரத்து!
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்நிலையில், தென்மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (T.No:20666), சென்னை - நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (T.No:20665), ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் (T.No:19577), திருச்செந்துார் - பாலக்காடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (T.No:16732) ஆகிய 4 ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.