“தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா” - பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்!
2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று இந்தியாவில் பரவிவருகிறது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில்தான் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு மே 25 ஆம் தேதியுடன் ஐந்து மடங்கு அதிகரித்து 1,000-ஐ தாண்டியுள்ளன.
சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி கொரனா தொற்று பாதிப்பு, கேரளாவில் 1,147 பேருக்கும், மகாராஷ்டிராவில் 424 பேருக்கும், டெல்லியில் 294பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்க்கும்கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 116 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளன. இந்த பாதிப்புகள் LF.7 மற்றும் NB.1.8.1 வகை கொரோனா வைரஸால் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுவரை இந்த வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பதற்றமடைய தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தமிழ்நாட்டில் இருந்து புனே ஆய்வு மையத்துக்கு 17 கொரோனா மாதிரிகளை அனுப்பினோம்.
மத்திய சுகாதார அமைச்சகம், முகக் கவசம் அணிவது நல்லது என்று தெரிவித்துள்ளது. அதையேத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். முகக்கவசம் அணிவது நல்லது, எதுவுமே கட்டாயம் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. இந்த சூழலில் கொரோனா பற்றிய வதந்திகளை பரப்பாதீர்கள். சென்னை அரசு மருத்துவமனையில் முதியவர் ஒரு இறந்ததற்கு கொரானா காரணம் அல்ல. அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பாலேயே உயிரிழந்தார்” இவ்வாறு அவர் கூறினார்.