For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆர்சிபி அணிக்கு ஹாட்ரிக் வெற்றி... குஜராத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது...

06:39 AM May 05, 2024 IST | Web Editor
ஆர்சிபி அணிக்கு ஹாட்ரிக் வெற்றி    குஜராத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்றைய போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய சாஹா ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4வது ஓவரில் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டினை சிராஜ் கைப்பற்றினார். தொடர்ந்து, சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தனது விக்கெட்டினை கிரீனின் பந்தில் இழந்து வெளியேறினார்.

15 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில், தனது விக்கெட்டினை யாஷ் தயால் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி இழந்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திவேதியா 21 பந்தில் 35 ரன்கள் சேர்த்து, யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்திருந்தது. 

20வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதில் பெங்களூரு அணி ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியது. குஜராத் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் எடுத்திருந்தார். எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இலக்கை விரட்டி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது ஆர்சிபி. அந்த அணியின் கேப்டன் டூப்ளசி, 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வில் ஜேக்ஸ், பட்டிதார், மேக்ஸ்வெல், கிரீன் ஆகியோர் பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கோலி, 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி இலக்கை வெற்றிகரமாக கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இக்கட்டான அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 13.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் எடுத்தார். ஸ்வப்னில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறியுள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் மொத்தமாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Tags :
Advertisement