நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்ததா? கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதில் என்ன?
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, “நமோ டிரோன் தீதி திட்டத்தின் கீழ் பலன் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை என்ன? இந்தத் திட்டத்தின் துவக்கத்தில் இருந்து வழங்கப்பட்ட மானியம் குறித்த விவரங்கள் மாநில வாரியாக என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, டிரோன் பைலட் உரிமங்களை பெற்ற எஸ்சி-எஸ்டி- ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் விவரங்கள், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில வாரியான விவரங்கள்; இந்தத் திட்டத்தால் பெண்களின் வருமானம், அதிகாரமளித்தல் மற்றும் விவசாய உற்பத்தித்திறனில் ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் ஏதேனும் ஆய்வு நடத்தியதா?
அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்?” ஆகிய கேள்விகளை எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசின் விவசாய மற்றும் விவசாயிகள் நலன் துறையின் இணையமைச்சர் ராம்நாத் தாகூர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,
”பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்காக டிரோன்களை வழங்கும் மத்திய அரசின் திட்டம்தான் நமோ டிரோன் தீதி திட்டம். 2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 15,000 ட்ரோன்களை வழங்கி நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில் முன்னணி உர நிறுவனங்கள் தங்கள் உள் வளங்களைப் பயன்படுத்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1094 டிரோன்களை வழங்கியிருக்கின்றன. இந்த 1094 டிரோன்களில் 500 டிரோன்கள் நமோ தீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் கர்நாடகாவில் 145 பெண்களுக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 128 பெண்களுக்கும், ஆந்திராவில் 108 பெண்கள், ஹரியானாவில் 102 பெண்கள், மத்தியப் பிரதேசத்தில் 89 பெண்கள், தெலங்கானாவில் 81 பெண்கள், குஜராத்தில் 58 பெண்கள், கேரளாவில் 51 பெண்கள், தமிழ்நாட்டில் 44 பெண்கள் என்ற வகையில் டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் அளித்த தகவல்படி 2023-24 ஆம் ஆண்டில் திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, தேனி, நாமக்கல், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு 44 டிரோன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ’கனிமொழி மகளிர் சுய உதவிக் குழு’வைச் சேர்ந்த உஷா லட்சுமி என்ற பெண்ணுக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 44 பேர்களில் 9 பேர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 35 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
2023-24 ஆம் ஆண்டில் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட 500 டிரோன்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு பெங்களூருவில் இருக்கும் வேளாண் மேம்பாடு மற்றும் கிராமப்புற மாற்ற மையத்திடம் (ADRTC) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிடைத்த முதல் கட்ட தகவல்கள்படி, டிரோன் பயன்படுத்துவதால் தண்ணீர் சேமிப்பு, தொழிலாளர் கூலி சிக்கனம், பூச்சிக்கொல்லி-உரம் சிக்கனம், உற்பத்தித் திறன் ஆகியவை மூலம் ஏக்கருக்கு 400 ரூபாய் லாபம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.