குஜராத் விமான விபத்து: 110 பேர் உடல்கள் மீட்பு... விமானம் மோதிய மருத்துவ விடுதியின் மருத்துவர்களின் நிலைமையும் கவலைக்கிடம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.
242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. விபத்தை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் 14 பேர் குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதில், கட்டடத்தில் இருந்த மாணவர்களும், மருத்துவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதில் பலபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பயணிகள் குறித்த தகவலுக்கு 1800 5691 444 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.