"காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக திகழ வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக திகழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வண்டலூர் ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழ்நாடு அரசு மக்களுக்கு அளித்துள்ள அமைதியான வாழ்க்கையை நிலைநிறுத்த காவலர்கள் உதவ வேண்டும். தமிழ்நாடு அரசு காவலர்களின் நலனை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். குற்றம் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும்.
காவலர் பணி என்பது வேலை அல்ல சேவை. காவலர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதி, மத வேறுபாடுகள் காட்டாமல் பொதுமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் நல்ல பாலமாக திகழ வேண்டும்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.