’மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு’- தனிப்படை காவலர்களிடம் சிபிஐயின் இரண்டு நாள் விசாரணை நிறைவு!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் கடந்த நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா , ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றமனது, சிபிஐ அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற காவலில் இருந்த 5 தனிப்படைக் காவலர்களையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் 5 தனிப்படை காவலர்களிடமும் நேற்று மாலை 5 மணி முதல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து 2 ஆவது நாளாக இன்றும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை விசாரணையை நடத்தினர்.
விசாரணியின் போது சிபிஐ அதிகாரிகள், யாருடைய உத்தரவின் பேரில் அஜித் குமாரை விசாரணை செய்தீர்கள் ?அஜித் குமாரை அடித்து துன்புறுத்தியது ஏன்? காயமடைந்த அஜித்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கொண்டு தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இன்றுடன் இரண்டு நாட்கள் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து 5 தனிப்படை காவலர்களும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேருக்கும் ஆகஸ்ட்13 ஆம் தேதிவரை மத்திய சிறை காவலில் அடைக்க மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார். இதனையடுத்து 5 தனிப்படை காவலர்களும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.