காதலன் உயிரிழந்ததால் துக்கம் ... ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் - திருப்பத்தூரில் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின்ராகுல் என்ற நர்சிங் கல்லூரி மாணவன் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நித்தின்ராகுல் காதலித்து வந்த நர்சிங் கல்லூரி மாணவி தரணி என்ற பெண் 9 மாத கர்ப்பான நிலையில் அவரும் இன்று காலை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இரண்டு பேரின் உடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நிலையில் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின் ராகுல் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியை சேர்ந்த தரணி என்பவரும் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் உள்ள வியாசா நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு பல நாட்கள் கல்லூரிக்கு செல்லாமல் தனிமையில் சந்தித்து உள்ளனர். இதனால் தரணி ஒன்பது மாத 9 மாத கர்ப்பமான நிலையில் நித்தின் ராகுலை தரணி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
திருமணத்திற்கு இருவரின் வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒன்பது மாத கர்ப்பிணியான தரணி மற்றும் நித்தின்ராகுல் இடையே நேற்று திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தின்ராகுல் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியில் பெங்களூர்-சென்னை ரயில்வே வழித்தடத்தில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த காதலி தரணி இன்று காலை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.