“அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தான் மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் என எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே.பி முனுசாமியின் தந்தை பூங்காவன கவுண்டர் கடந்த 17ஆம் தேதி தனது 103 வது வயதில் காலமானார். இந்த
நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி
பழனிச்சாமி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள கே.பி.முனுசாமி இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கனமழை பெய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விதித்தது. ஆனால் இந்த அரசு அதனை அலட்சிய படுத்திய காரணத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தேவையான முன்னெச்சரிக்கை எடுக்காததால் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில் பருவகாலம் தொடங்குவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமத்த முயல்கிறது .
மேலும் திமுகவின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது அவர்கள் ஊழல் செய்ததே ஆகும். எனவே திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யபடுவார்கள். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.