For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” - அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

01:57 PM Jul 16, 2024 IST | Web Editor
”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்”   அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 

Advertisement

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.  இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.  மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது.  இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டார்.

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக சார்பில் வில்சன் எம்பி, திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் ஓ.ஏஸ்.மணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து செல்வப்பெருந்தகை மற்றும் ராஜேஸ் குமார்,  விசிக, பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம், மதிமுக, கொமதேக, தவாக, மமக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது என கூறிய கர்நாடக அரசிற்கு அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி நீரை விடுவிக்க கோரி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Tags :
Advertisement