முறைகேடான டெண்டர் மூலம் ரூ. 397 கோடி அரசுக்கு இழப்பு - TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!
முறைகேடான டெண்டர் மூலம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் ஊழல். TANGEDCO மற்றும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய போட்டி ஆணையத்தில் (Competition Commission of India) சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பல்வேறு திறனில் 45,800 மின்மாற்றிகள் 1182 கோடி ரூபாயில் கொள்முதல் செய்வதற்காக 10 டெண்டர்கள் கோரப்பட்டன. அதில், 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த்து.
குறிப்பாக, 500 கிலோ வாட் திறனுடைய 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய 2021ம் ஆண்டு, நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. அதில், 26 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அந்த ஒப்பந்த்தாரர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக 13 லட்சத்து 72 ஆயிரத்து 930 ரூபாய் என ஒரு மின்மாற்றியின் டெண்டர் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சமர்பித்துள்ளனர்.
இவ்வாறு 26 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியான விலைப் பட்டியலை சமர்ப்பித்திருப்பது என்பது முறைகேடான டெண்டர் நடைமுறையாக உள்ளது. மேலும் கூட்டு சதி நடந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது. இதனையடுத்து ஒரு மின்மாற்றி 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் என விலை இறுதி செய்யப்பட்டு, அந்த 26 ஒப்பந்ததாரர்களில்16 பேரை இறுதி செய்து அவர்களுக்கு தலா 50 எண்ணத்தில் 800 மின்மாற்றிகள் 99கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு மின்மாற்றியின் விலையே, 7 லட்சத்து, 89 ஆயிரத்து, 750 ரூபாய்தான்,
அதாவது, 800 மின்மாற்றிகளையும், 63.18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க முடியும். ஆனால் 4 லட்சத்தி 60 ஆயிரத்து 50 ரூபாய் அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை வாங்கி ஒரு டெண்டரில் அரசுக்கு சுமார் 36 கோடியே 80லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
அதேபோல 200 கிலோ வாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 30 ஒப்பந்ததாரர்களும், ஒரே மாதிரியாக 7 லட்சத்து 7 ஆயிரத்து 823 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர். மேலும் 100 கிலோவாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 33 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 80 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர்.
இவ்வாறு 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில், TANGEDCO மீதும், முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் இந்திய போட்டி ஆணையத்தில் (Competition Commission of India) வழக்கு தொடர்ந்துள்ளார்.