"இரண்டு நாளில் நல்ல செய்தி" - வெளிநாட்டிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி!
"இரண்டு நாளில் நல்ல செய்தியுடன் வருகிறேன்” என வெளிநாட்டிலிருந்து திரும்பிய மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வருகிற பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். இந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் பல முக்கிய நிகழ்ச்சிகளை மக்கள் நீதி மையம் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினத்தில் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் காலை 10 மணியளவில், தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்; அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தக் லைஃப் படத்தின் முன்னேற்பாடு பணிகளுக்கு கமல்ஹாசன் வெளிநாடு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது..
“தக் லைஃப் படத்தின் முன்னேற்பாடு பணிகளை முடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறேன். கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். இரண்டு நாட்களில் நல்ல செய்திகளுடன் நான் திரும்ப உங்களை சந்திக்கிறேன். வெளிநாட்டில் இருந்து எந்த நல்ல முடிவையும் நான் எடுத்து வரவில்லை. நல்ல முடிவுகளை இப்போதே சொல்ல முடியாது, நாளை மறுநாள் சொல்கிறேன். ” என கமல்ஹாசன் தெரிவித்தார்.