'Gem-ங்க'... திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை... மணமகளை கையில் ஏந்தியவாறு அக்னியை வலம் வந்த மணமகன்... சினிமா பாணியில் நடந்த சம்பவம்!
மத்தியப் பிரதேசத்திலுள்ள கும்பராஜ் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிங். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி சொலான்கி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. இவர்களின் திருமணம் அட்சய திருதியை தினத்தன்று நடைபெற இருந்தது. இவர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்தனர். இதற்கிடையே, திருமணத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென நந்தினியின் (மணப்பெண்) உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக குடும்பத்தினர் நந்தினியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் உடல்நிலை மோசமடைந்ததால் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நந்தினியை அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை படிப்படியாக சரியான போதிலும், மருத்துவர்கள் நந்தினி முழுமையாக படுக்கை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். பாரம்பரியமான முறையில் திருமணம் நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். இப்போது விட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த பொருத்தமான முகூர்த்தம் வருவதாக இரு வீட்டாரும் நம்பினர்.
இதனால் அவர்களின் திருமணத்தை மருத்துவமனையிலேயே நடத்த முடிவு செய்தனர். அவர்கள் இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசி அனுமதி வாங்கினார். இந்த திருமணத்திற்காக வெளிநோயாளிகள் பிரிவை ஒதுக்கினர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் மருத்துவமனையில் செய்யப்பட்டது. ஆதித்யா (மணமகன்) தனது உறவினர்களுடன் மருத்துவமனை வந்தார். மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் மேள தாளங்கள் தவிர்க்கப்பட்டது. திருமண மேடை போன்று மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்டது.
அதிகாலை 1 மணியளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆதித்யா - நந்தினியை தனது கைகளில் சுமந்து கொண்டு அக்னியை வலம் வந்தார். உறவினர்கள் மணமக்கள் மீது மலர்களை தூவினர். இந்த திருமணம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. 7 நாட்களுக்கு முன்பு நந்தினி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் தற்போது குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.