விநாயகர் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி... சீன பொருட்களை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இந்திய பண்டிகைகளின் போது, உள்ளூர் சந்தைகளில் வெளிநாட்டு பொருட்களே விற்கப்படுவதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.
குஜராத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,
“கணேஷ் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து வருகின்றன. கண்கள் கூட சரியாகத் திறக்கப்படாத, சிறிய கண்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எவ்வளவு லாபம் ஈட்டினாலும், வெளிநாட்டுப் பொருட்களை விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க கிராமப்புற வணிகர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
ஒரு குடிமகனாக, உங்களுக்காக எனக்கு ஒரு பணி உள்ளது. வீட்டிற்குச் சென்று 24 மணி நேரத்தில் நீங்கள் எத்தனை வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற பட்டியலை உருவாக்குங்கள். நீங்கள் உணரவில்லை, ஆனால் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. நம் இந்தியாவைக் காப்பாற்ற, இந்தியாவை கட்டமைக்க, இந்தியாவை வளரச் செய்ய விரும்பினால், ஆயுதப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் மட்டும் பொறுப்பல்ல. அது 140 கோடி குடிமக்களின் பொறுப்பு” என தெரிவித்தார்.
அலங்கார விளக்குகள், பட்டாசுகள், பொம்மைகள் மற்றும் கடவுள் சிலைகள் போன்ற பொருட்கள், பெரும்பாலும் சீனாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் திருவிழா விற்பனையில் இவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இது உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதிக்கிறது.