பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு!
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாமக கட்சியின் புதிய இளைஞர் அணி தலைவராக ஜிகே மணியின் மகன் தமிழ்குமாரன் நியமனம் செய்யப்பட்டார். அதற்கான நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள்.
தொடர்ந்து பேசியவர், இவருக்கு ஏற்கனவே இந்த பதவியை நான் கொடுத்தேன். கடிதத்தை பெற்று கொண்டு வாசல்படி தாண்டுவதற்குள் அதை நான் ஏற்று கொள்ள முடியாது, உடனே ராஜினாமா செய் என அன்புமணி சொன்னார். நீ ராஜினாமா செய்ய வேண்டாம் என சொன்னேன். 2 மாதத்தில் கட்சியின் பொதுக்குழு கூடிய போது அதில் கலந்து கொள்ள தனது மனைவி, பிள்ளைகளுடன் தமிழ்குமரன் வந்து புதுச்சேரியில் அறை எடுத்து தங்கினார்கள். பொதுக்குழு கூடும் அன்று காலை 7.30 மணிக்கு தான் எனக்கு போன் வந்தது. அதில் தமிழ்குமரன் பொதுக்குழுவிற்கு வர கூடாது என அன்புமணி சொன்னார்.
இதனை நான் எப்படி அவருக்கு சொல்வேன் என்று நினைத்து, அதனையும் பொருட்படுத்தாமல் நான் அவரிடம் சொன்னேன். அவரும் பொதுக்குழுவிற்கு வராமல் போய்விட்டார். நான் கொடுத்த பதவிக்கான கடிதத்தை கிழித்து போட்டு விடு என்று கூறிவிட்டேன். அதன்பிறகு எனது பேரனுக்கு அந்த பதவியை வழங்கினேன். அப்போது என் மீது மைக் பாய்ந்து வந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
தன் சொந்த அக்கா மகனையே அவர் ஏற்று கொள்ளவில்லை. இப்போது அந்த பொறுப்பு மீண்டும் தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக கேவலமாக எழுதுகிறார்கள். உயிரோடு இருப்பவரை செத்து போய்விட்டார் என போட்டால் எப்படி இருக்கும்.
சமூக வலைத்தளத்தில் கண்டபடி பதிவு போட்டால் அதனை கண்டிக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் இறந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளேன். இனி அரசியல் கூட்டங்களை நடத்துபவர்கள் ஒரு உயிர் கூட போகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு காவல்துறையும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது போன்ற துயர சம்பவங்கள் இனி ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். கரூர் சம்பவத்தில் ஒரு முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்துள்ளார். அக்கப்போர் ஆசாமிகள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள் என விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.