கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி - 2 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மண மூர்த்தி 50. இவரது மனைவி ஜோதி 40, மகள் கிர்த்திகா 20, ஜோதியின் தாயார் சாரதாம்மாள் 75, ஆகிய நான்கு பேரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வந்துள்ளனர். அப்போது சுற்றுலா பயணிகள் போல் சென்றவர்கள் திடீரென ஒன்றன் பின் ஒருவராக தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் இதனைக் கண்டு உடனடியாக தண்ணீரில் குதித்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஜோதி மற்றும் அவரது மகள் கிர்த்திகா இருவரையும் மீனவர்கள் மீட்டனர். லக்ஷ்மண மூர்த்தி மற்றும் சாரதாம்மாள் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்? என சொல்லப்படுகிறது.