இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஜாமின்!
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றுள்ளார். இந்த பயணத்துக்கான செலவுகளில் அரசு நிதியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விக்கிரமசிங்க தனது பயணத்திற்கான செலவுகளை தானே ஏற்றுக்கொண்ட தாகவும், எந்த அரசு நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் குற்றபுலனாய்வு துறையானது விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22ல் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலங்கை நீதிமன்றமானது 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து பிரதான மகசின் ரிமாண்ட் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்ரமசிங்கே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறே விடியோ அழைப்பு மூலம் இன்று கொழும்பு ஃபோர்ட் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரனையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.