For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

07:40 AM Feb 26, 2024 IST | Web Editor
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்   இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட  நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதேபோல, புதுப்பிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தையும் அவர் திறக்கிறார்.

சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புதிய நினைவிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நாளை (பிப்.26) திறந்து வைக்க உள்ளார்.  பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்பம்சங்கள்: 

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் என்று பெயர்கள்  பொறிக்கப்பட்டுள்ளன.  நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், அதன் வலபுறம் இளங்கோவடிகள் சிலையும் இடதுபுறம் கம்பர் சிலையும் உள்ளன.  நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன.

இடதுபுறத்தில் 'அண்ணா அருங்காட்சியம்' அமைந்துள்ளது.  பேரறிஞர் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சென்று காட்சியளிக்கின்றன.  அங்கு 'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்து சென்றால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரின் நினைவிடத்தில்,  'ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.  கருணாநிதியின் நினைவிடத்தின் முன்னே இருபுறமும்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 8-11-2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப் பட்டுள்ளன.

நினைவிடத்தின் பின்புறம் கருணாநிதியின் முகம் பொன்னிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றிலும் மின்விளக்குகள் ஒளிர்கின்றன.  கருணாநிதியின் நினைவிடத்தின் கீழே நிலவறைப் பகுதியில், 'கலைஞர் உலகம்' எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அருங்காட்சியகம் திறக்க ஒரு வார காலம் வரை தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள.  இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக முன்பதிவு செய்ய ஏற்ற வகையில் இணையதளம் உருவாக்கப்படும் எனவும், முன்பதிவு செய்தவர்கள் பார்வையிட உரிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் இடப்புறம் சென்றால், நடைபாதையின் வலப்புறத்தில், திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிர்கின்றன.  அருங்காட்சியகத்தின் உள்ளே வலப்பக்கம் திரும்பினால்,  இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ்ப்புறம், 'தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும்' என முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், 'தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல்' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும், அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

அதன் அருகில், 'கலைஞரின் எழிலோவியங்கள்' எனும் அறை அமைக்கப்பட்டுள்ளது.  அதில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், அவரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்துள்ளன.

அடுத்து 'உரிமைப் போராளி கலைஞர்' எனும் தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கருணாநிதியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'சென்னைக் கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி உரையாற்றும் காட்சி' அமைந்துள்ளது.

பின்புறம், தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்துள்ளது.  அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் உள்ள நிலையில், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.  அங்கு சில நிமிடங்களில் புகைப்படம் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  அதன் வலப்புறத்தில் கருணாநிதியின் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கருணாநிதியின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும்.  அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால், அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.

தொடர்ந்து, 'அரசியல் கலை அறிஞர் கலைஞர்' எனும் அறையின் உள்ளே திரை அமைக்கப்பட்டு அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கருணாநிதியின் பிறப்பு முதல், இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள்,  'கலையும் அரசியலும்' எனும் தலைப்பில் படக் காட்சிகளாக தோன்றும்.

அடுத்தததாக 'சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்' எனும் அறையில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.  அதில் அமர்ந்தவாறு தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் கருணாநிதியின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்
வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்தும்.

அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடைபாதையின் இருபுறங்களிலும், பெண்ணியக் காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கருணாநிதி முதலான தலைப்புகளில் புகைப் படங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.  அப்பகுதியில் 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.  அவற்றில் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

அதன் எதிரே கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தோன்றும் அருமையான புகைப்படம் பெரிய அளவில் அமைந்து, 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தலைப்பாகக் கொண்டுள்ளது.  இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கருணாநிதி அந்தரத்தில் மிதப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. நடை பாதையை விட்டு, வெளியே வந்தால் நேர் எதிரே கருணாநிதி புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

அங்கே,  கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் கண்டு வெளியே வரும் வழியில் வலப்புறச் சுவர்களில் தமிழர்களின் கலாச்சார மையம் வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய கருணாநிதி படைத்த நவீனங்களின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வெளியே வரும்போது இருபுறங்களிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும், ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

Tags :
Advertisement