தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்... பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!
தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் குளிர் காலநிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குளிர் காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெகோலிக்னி கிராமத்தில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 13 பேர் இருந்ததாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் 4 பள்ளிக் குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் வெள்ளத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 குழந்தைகள் மாயமானதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீரால் நிரம்பியுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், டர்பன் மற்றும் குவாசுலு-நடால் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.