குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு - 3 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் கடந்த 2 தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நேற்று முன்தினம் மாலை அருவிகளில் திடீரென தண்ணீர் அதிகரித்ததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மலைப்பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.