வெள்ள பாதிப்பு - தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு தீவிரமாக உள்ளதால் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.