இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக ‘ஜீவா’ சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக காங்கிரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.