நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!
தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மீன்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் முக்கிய இனப்பெருக்க காலமாகும்.
இந்த காலத்தில் விசைப்படகுகளில் கடலில் சென்று மீன்பிடிக்கும் போது மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும். இதனால், மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததுது. இது ஜூன் 14 வரையில் 61 நாட்கள் அமலில் இருக்கும்.
மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதிகளில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் அமலுக்கு வந்தது. இந்த தடைகளை மீறி மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம், 1983ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.