முதல் ஒருநாள் போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.
இதனிடையே பல மாதங்களுக்கு பின் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட உள்ளனர். ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக விளையாட உள்ளது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்றும், விராட் கோலி 3-வது வீரராகவும், அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்கும், சுழலில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு பெரிய பலமாகத் திகழ்கின்றனர். ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.