டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து - பயத்தில் கீழே குதித்த தந்தை மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு!
டெல்லி துவாரகாவின் செக்டார் 13-ல் உள்ள ‘சபாத்’ அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் இன்று காலை 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிழம்புகள் கொழுந்து விட்டு எரிந்து அத்தளம் முழுவதும் பரவியதால் கரும்புகை சூழ்ந்துள்ளது. அப்போது உள்ளே சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 10 வயது மகள் மற்றும் மகன் அச்சத்தில் பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
உடனடியாக கீழே குதித்தவர்களை மீட்டு, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் குடியிருந்த யாஷ் யாதவ் (35 வயது) மற்றும் அவரின் 10 வயது மகன் மற்றும் மகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களில் சிலர் அச்சத்தின் காரணமாக உயிர் தப்பிக்க குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தங்களின் உயிரை தற்காத்துக் கொண்டனர்.
மேலும், அதிகளவிலான புகைமூட்டத்தால் அப்பகுதியில் இருந்து மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.