யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்... இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
“ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில், அம்மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஒரு புதிய அதிரடி அறிவிப்பை அம்மாவட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது 2025 ஜனவரி 1 முதல் யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய (எஃப்.ஐ.ஆர்) மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங்,
“இந்தூரில் யாசகம் பெறுவதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் யாசகம் கொடுப்பதன் மூலம், பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
யாசகம் எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் இறுதி வரை நகரத்தில் நடைபெறும். ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும்” எனக் கூறினார்.
இந்தூரை உள்ளடக்கிய நாட்டின் 10 நகரங்களை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளது.