முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2025-26-ம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும்” என தெரிவித்தார்.