தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து!
தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
“தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்! யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார். அதனாலே அவர் நம் பெரியார் என்றானார். பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அமைத்திட உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார். 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”சுயமரியாதையின் சின்னம் தந்தைப் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக தந்தைப் பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மற்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த தந்தை பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு தந்தை பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடெசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பகுத்தறிவு. சுயமரியாதை. சமூகநீதி. மூன்றின் உயிராற்றல் தந்தை பெரியார் வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு தலைவர்களும் அவருக்கு தம் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.