For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ.2.50 கோடி மோசடி - இருவர் கைது!

புதுச்சேரியில் பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10:49 AM Feb 27, 2025 IST | Web Editor
போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் மூலம் ரூ 2 50 கோடி மோசடி   இருவர் கைது
Advertisement

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66) ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனது ஒய்வூதிய பணத்தை கிரிப்டோகரன்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன் பின்னர் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இணையதளத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Advertisement

இதனால் அதை நம்பிஅவர் அந்த லிங்கை தொட்டு அதை பின் தொடர்ந்தார். அதன் பின் அவருக்கு ஒரு மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டு கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில் அசோகன் தனது முதல் தவணையாக ரூ.10 லட்சம் முதலீடு செய்தார். அதன்பின் கோவையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்றார்.

அங்கு நடிகை தமன்னா உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் விழாவை சிறப்பித்தனர். அதை பார்த்த அசோகன் மகிழ்ச்சியில் தான் பேசிய அதே நபரிடம் தொடர்பு கொண்டு கிரிப்டோ முதலீட்டில் ஈடுபட்டார். மேலும் அசோகன் அவரது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த 10 பேரையும் கிரிப்டோகரன்சி மூதலீட்டில் ஈடுப்படுத்தினார். பின் 3 மாதங்களுக்கு பிறகு சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்ற கிரிப்டோகரன்சி நிகழ்ச்சிக்கு அசோகன் அழைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது அங்கு நடிகை காஜல் அகர்வால் விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியில் பல கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கினார். இதனை பார்த்த அசோகன் தனக்கு காருக்கு பதிலாக பணம் வேண்டும் என ரூ.8 லட்சம் பணமாக பெற்று கொண்டார். இதன் பின்னர் அசோகன் மற்றும் அவரது நண்பர்கள் ரூ 2.50 கோடி வரை பல்வேறு தவணைகளாக அஷ்பே நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த நிறுவன கணக்கில் ரூ.9 கோடி இருப்பது தெரியவந்தது. இதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடன் பேசி வந்த எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது எதிர் முனையில் போஃனை எடுக்கவில்லை. அதற்கு பின்பு தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் கோயம்புத்தூரை சேர்ந்த நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த் குமார் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பென்ஸ் சொகுசு கார் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் கோயம்புத்தூரை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement