கலால் வரி உயர்வு... பெட்ரோல், டீசல் விலை உயருமா?
கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில், கலால் வரியை பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது.
கிட்டத்தட்ட கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகளும் இந்தியாவில் குறையும் என அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத வகையில் மத்திய அரசு கலால் வரியை அதிகரித்துள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று தெரிந்துவிட்டது. ஆனால் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் லாபத்தை மக்களுக்குக் கொடுக்காமல் மத்திய அரசு பகிர்ந்துகொள்ள முடிவு செய்துவிட்டதே இந்த அச்சத்துக்குக் காரணம்.
மத்திய அரசு சில உற்பத்தி பொருள்கள் மீது விதிக்கும் மறைமுக வரியான கலால் வரியை உற்பத்தியாளர் நேரடியாக மத்திய அரசுக்கு செலுத்திவிட்டு, அதனை உற்பத்தி செய்த பொருளின் விலையுடன் சேர்த்து மக்களிடமிருந்து வசூலித்துக் கொள்வார். இதனால்தான் இந்த அச்சம் வலுவடைந்துள்ளது. ஆனால், இப்போதைக்கு விலை உயர்த்தப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.