For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

01:53 PM Dec 20, 2023 IST | Web Editor
 தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
Advertisement

'தென்மாவட்டங்களில் பள்ளிகள் பாதுகாப்பான சூழலுக்கு திரும்பிய பிறகு தேர்வுகள்
நடத்தப்படும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு மாநில
பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான
வினா வங்கிகள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று, வினா வங்கி புத்தகங்களை வெளியிட்டார்.

இதன் மூலம்,  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாதிரி
வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள்,  கணித தீர்வு புத்தகங்கள் போன்றவை தமிழ்
மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் இன்று (டிச.20) முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள் அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.  இதன் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல்,  இடப்பெயர்வு சான்றிதழ் போன்றவற்றை இணையவழி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்கு பின்னர்,  செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

மாணவர்களுக்கு சுலபமாக 14 நாட்களுக்குள் சான்றிதழ்கள் கிடைக்க இந்த இணைய வழி
சேவைகளானது தொடங்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்களின் உதவியோடு,  அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையானது பொழிந்துள்ளது.  இந்த மாவட்டங்களில் பெய்த மழையானது எதிர்பாராததாகும்.  சென்னையில் வழங்கப்பட்டது போல தென் மாவட்டங்களிலும் இயக்குநர்களின் உதவியோடு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.  அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழையானது தற்போது சற்று குறைந்துள்ளது.  இதன் பிறகு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கணக்கிடப்பட்டு உடனடியாக சீரமைக்கப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்ட பள்ளிகளில்,  பாதுகாப்பான சூழல்
திரும்பிய பிறகு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
பொதுத் தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Tags :
Advertisement