For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“#Monkeypox அச்சுறுத்தும் சூழலிலும்... செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதை தடுக்கும் கரம் எது?” மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக எம்.பி பி.வில்சன் கேள்வி!

10:51 AM Aug 31, 2024 IST | Web Editor
“ monkeypox அச்சுறுத்தும் சூழலிலும்    செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்படுவதை தடுக்கும் கரம் எது ” மத்திய அமைச்சர் ஜே பி நட்டாவுக்கு திமுக எம் பி பி வில்சன் கேள்வி
Advertisement

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் செயல்படுவதைத் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கரங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

குரங்கு அம்மை நோயினைக் கையாளவும், போதுமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் மத்திய அரசு முழுமையாக தயாராகி உள்ளதா? தேசிய சுகாதாரக் கொள்கை 2002 க்கு இணங்க, தடுப்பூசிகளை மலிவு விலையில் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய அரசு நிறுவனமான எச்.எல்.எல் மூலம் சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை நிறுவ 2012 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதை உண்மை என்று நம்பிய தமிழ்நாடு அரசு 100 ஏக்கர் நிலத்தை எச்.எல்.எல் நிறுவனத்திற்கு வழங்கியது. தாமதங்கள் காரணமாக, 2013 இல் அசல் திட்டச் செலவான ரூ .594 கோடியிலிருந்து 2019 இல் திட்டச் செலவு ரூ .904 கோடியாக உயர்ந்தது.

பின்னர் வளாகமும் திறக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் கிடைக்காததாலும், சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளை செலுத்த முடியாததாலும், வளாகம் மூடப்பட்டது. இதனால், இன்றுவரை ஒரு தடுப்பூசி கூட தயாரிக்கப்படவில்லை என்பதோடு, வேண்டுமென்றே சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் சில வணிக காரணங்களுக்காக ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமானது மூடப்பட்டுள்ளது. இந்த 900 கோடி அலகைப் பயன்படுத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயருக்காக சில டெண்டர்கள் விடப்பட்டு, ஏலதாரர்கள் யாரும் இல்லை என்று காரணம் காட்டி அவையும் கைவிடப்பட்டன.

மே 2020- இல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கோவிட் -19 தடுப்பூசிகளை பெருமளவில் உற்பத்தி செய்ய உதவும் வகையில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தினை மாநில அரசிடம் குத்தகைக்கு ஒப்படைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்திற்கு நேரில் சென்றும் முதலமைச்சர் பார்வையிட்டார். நானும், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இது தொடர்பாக கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். மேலும் இந்த அலகினை செயல்பட வைக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கேள்விகளையும் எழுப்பினேன். மார்ச் 2023 இல் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, முன்னாள் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், 100 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த வளாகம் இன்னும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அண்மையில் 2024 ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் மீது நான் ஆற்றிய உரையில் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தியபோதும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், புதிய குரங்கு அம்மை நோய் தாக்கத்தின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும், 100 ஏக்கர் பிரதான நிலம் பயனற்றுக் கிடப்பதைக் கருத்தில் கொண்டும், 900 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டும், உயிர் காக்கும் இந்த முக்கியமான ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் செயல்படுவதைத் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கரங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு ஜே.பி.நட்டாவை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொடிய குரங்கு அம்மை வைரஸின் அச்சுறுத்தலுக்கு இந்தியாவை தயார்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கோரியபடி ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை மீண்டும் திறந்து தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.

Tags :
Advertisement