"நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது" - திருமாவளவன் பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் நெல்லை பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் திராவிடத்தை எதிர்க்கக்கூடிய நபர்களால் தான் சாதிப் பெருமை பேசி உயர்த்தி பிடிக்கிறது. இதன் காரணமாகவே சாதிய ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது. சங்பரிவார் கும்பலுடன் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள் என தொடர்ந்து சொல்லி வருவது வருங்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்த்துக் கொள்வதற்காகத்தான். சங்கப் பரிவார் அமைப்புகளை வளர்த்து விட்டால் நாளுக்கு ஒரு ஆணவ படுகொலை விழும், சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் வன்முறைகள் உத்திர பிரதேஷம், பீகாரை போல தமிழகத்திலும் வெறியாட்டம் போடும்.
இந்தியா முழுவதும் சனாதன அரசியல் தகர்த்தெறியப்பட வேண்டும் அப்போதுதான் ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். ஆணவ படுகொலைகளுக்கு ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகள் தான் காரணம் என சொல்லிவிட்டு நகர்ந்து விட முடியாது. யார் முதலமைச்சராக இருந்தாலும் தடுக்க முடியாது. நானே முதல்வரானால் கூட சாதிய வன்கொடுமைகளையும் ஆணவக் கொலைகளையும் கட்டுப்படுத்தி விட முடியாது, சமூகத்தில் இது போன்ற செயல்கள் தவறு என்பதை சொல்வதற்கான விழிப்புணர்வு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சொல்வதற்கு ஆட்கள் இல்லை. அதனால்தான் மத்திய மாநில அரசுகள் ஆணவ கொலைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர தயங்குகிறது.
சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை போன்று ஆணவக் கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தமிழக அரசிடம் கருத்து கேட்டது. இதனால் வரை தமிழகத்தில் இருந்த எந்த அரசும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வந்தால் தலித் அல்லாத நபர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பாப்பாபட்டி கீரிப்பட்டி பகுதிகளில் தலித்துகள் ஊராட்சி மன்ற தலைவராக வருவதை எதிர்த்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தலை திமுக அரசு நடத்தியது.
அந்த துணிச்சலோடு ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவர்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டாம், உயர்நீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கவின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேரும் காவல் துறையைச் சார்ந்தவர்கள். சிபிசிஐடி காவல்துறையோ சட்டம் ஒழுங்கு காவல்துறையோ யாராக இருந்தாலும் இந்த வழக்கில் நீதிக்கு சாதகமாக இருப்பார்கள் என எப்படி சொல்ல முடியும்.
உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நீதிபதி மற்றும் புலமைப்பு துறையில் ஆற்றல் உள்ளவர்கள் அடங்கிய குழுவை விசாரிக்க நியமிக்க வேண்டும். தினந்தோறும் இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்சி வலியுறுத்தும் முதன்மையாக கோரிக்கையாக வைக்கிறோம். கவின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியை வேண்டாம் என அவர்கள் மறுக்கிறார்கள் இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான நிதியை அவர்களுக்கு வழங்க வேண்டும் புதிய வீடு, இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம், அரசு வேலை 12.5 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
கவின் குடும்பத்திற்கான பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சாதிய பஞ்சாயத்துகள் தான் கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. அதனாலேயே சாதி, மத வெறியர்களை கண்காணிக்க தனி உளவு பிரிவை அமைக்க வேண்டும் என தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இதனை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சாதிய பிரச்சனைகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். சாதிய கொலைகளை தடுப்பதோடு நிறுத்தி விடாமல் அதனை ஊக்குவிக்கும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள் அதிகரித்து வருகிறது அடுத்தடுத்து சாதிய கொலைகள் நிகழ்ந்து வருகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை நினைவில் வைத்து ஆணவபடுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்ற வேண்டும் இதே சட்டம் தேசிய அளவில் வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதற்கு அமித்ஷாவை நேரில் சந்திக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டது.
ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இந்திய அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தேசிய பார்வையோடு நாங்கள் வலியுறுத்தி கடிதத்தை அவரது செயலாளரிடம் வழங்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.