“இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” - ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தது. முதலில் பாகிஸ்தான் மீது சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, விசா நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பதிலுக்கு இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான் பரப்பில் பறக்க தடை, வர்த்தக நிறுத்தம், இந்தியர்கள் வெளியேற்றம், சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. பாகிஸ்தான் அரசு தங்கள் மீது இந்தியா வீண் பழி சுமத்துகிறது, தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் உலகுக்கு இந்தியா காண்பிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும் என்றும் கூறி வருகிறது.
அதே வேளையில் இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐநா வலிறுத்தி வரும் சூழலில், இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தினரை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதனால் எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் சமா என்ற ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, விரல்கள் எப்போதும் பாகிஸ்தானை நோக்கி நீட்டப்படுகிறது. இது மட்டுமல்லாமல், காஷ்மீரில் உள்ள 8 லட்சம் பலம் வாய்ந்த இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடுதான் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்” என குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கு முன்பு பிசிசிஐ, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி இனி விளையாடாது என்று தெரிவித்தது.