ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாதகவை பின்னுக்கு தள்ளிய நோட்டா... தபால் வாக்குகளில் வெளியான அதிர்ச்சி!
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 11 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 30,657 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 5,954 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதில், 1204 வாக்குகள் பெற்று NOTA-வுக்கு மூன்றாவது இடத்தை பிடித்தது. முன்னதாக தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா 2ஆம் இடத்தைப் பிடித்தது. தபால் வாக்குகளில் திமுக 197 வாக்குகளையும், நோட்டா 18 வாக்குகளையும், நாதக 13 வாக்குகளையும் பெற்றிருந்தன.