ஈநாடு குழும அதிபர் ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்!
மூத்த பத்திரிக்கையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88.
ஈநாடு செய்தித்தாள், ஈ டிவி தொலைக்காட்சிகள், ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட பல்வேறு மெகா நிறுவனங்கள் கொண்ட குழுமத்தின் தலைவர் ராமோஜிராவ். ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவ், உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென அவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை பாதிப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.