அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகள் - வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் சமீபத்தில் மோதல் மோதல் நீடித்து வந்தது. ட்ரம்பிற்கு ஆதரவாக பேசிவந்த எலான் மஸ்க், தீடிரென அவரை கடுமையாக விமர்சித்து வந்தது பேசுபொருளானது. அந்த வகையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், “எலானால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் எலானுக்கு நிறைய உதவி செய்துள்ளேன். அவர் என்னை பற்றி பல அருமையான விஷயங்களை கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் என்னைப்பற்றி மோசமாகப் பேசவில்லை, ஆனால் அதுவும் கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், “எனது ஆதரவு இல்லாவிட்டால் ட்ரம்ப் தேர்தலில் தோற்று இருப்பார். ஜனநாயக கட்சியினர் ஆட்சியில் இருந்து இருப்பார்கள். குடியரசு கட்சி செனட் சபையில் 51-49 என இருந்து இருக்கும். நன்றி கெட்ட தன்மை” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுமிகள் பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பான ரகசிய ஆவணத்தில் ட்ரம்ப் பெயர் இருப்பதாகவும் கூறி எலான் மஸ்க் பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகளுக்கு எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "கடந்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். நேர்காணல் ஒன்றில் அதிபர் ட்ரம்பிடம் எலான் மஸ்கின் இந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப் "எனக்கு எந்தவிதமான மனக்கசப்பும் இல்ல" என்று கூறியதாக தெரிகிறது.