தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவே நியமிக்க வேண்டும் என்ற நடைமுறை முடிவுக்கு வருகிறது. முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்யும்.
இந்நிலையில், தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவதற்கு ஏற்ப மத்திய அரசு இந்த மசோதாவை உருவாக்கியுள்ளது. மக்களவையில் இந்த மசோதா மீது நேற்று (வியாழக்கிழமை) நடந்த விவாதத்தின் போது பேசிய சட்டத் துறை அமைச்சர், "தேர்தல் ஆணையர்களின் பணி நிலைமைகள் பற்றிய 1991 சட்டம் ஒரு அரைகுறை முயற்சியாகும். முந்தைய சட்டம் கணக்கில் எடுக்கத் தவறிய அனைத்து விஷயங்களையும் இப்புதிய மசோதா உள்ளடக்கியுள்ளது" என்று தெரிவித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதவின்படி, முன்னாள், தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியில் இருக்கும்போது கூறிய வார்த்தைகள், நடந்து கொண்ட செயல்களுக்காக அவர்கள் மீது கிரிமினல் அல்லது சிவில் வழக்குகளை நீதிமன்றங்களில் தொடர முடியாது.