தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே நாளை 4ம் கட்ட பேச்சுவார்த்தை!
நாளை திமுக-வுடன்,மதிமுக நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இதில் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப். 29-ம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் மதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 4) காலை 11 மணிக்கு மேல் திமுக-வுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக-வினர் ஒரு மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் வழங்க வலியுறுத்துவதாகவும், ஆனால் திமுக-வினர் மக்களவை தொகுதி கொடுக்க மறுப்பதாகவும், அதன் காரணமாக பேச்சு வார்த்தை நீடித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டணி சின்னம் இல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் மதிமுக-வினர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.