கல்வி விருது வழங்கும் விழா - பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில், மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை வழங்கி கௌரவித்தார். மேலும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, பேனா பரிசு வழங்கி கௌரவித்தார். முன்னதாக மாணவி ராஜேஸ்வரி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், "மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள். வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து சாதித்திருக்கிறார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. நிச்சயம் ஒருநாள் விஞ்ஞானியாக மாறுவார்" என்று தெரிவித்தார்.