பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டம், அனைத்துக்கட்சி கூட்டம் என அடுத்தடுத்து பல்வேறு ஆலோசனைகள் மூலம் அடுத்தகட்ட நகர்வுகளை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்த நிலையில் இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியுள்ளது. மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் போர் பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ரபேல் விமானங்கள் தரை இலக்குகளை துல்லியமாக தாக்குதல் உள்ளிட்ட சிக்கலான பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பவை ஆகும். இதேபோல் நாட்டின் கடற்படை வீரர்களும் ஏவுகணைகளை வீசி இலக்கை அழிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டனர். எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் இந்த தீவிர நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.