"ஏப்பா... சால்வையெல்லாம் போடாதிங்கப்பா எலுமிச்சம் பழம் கொடுங்க ஜூஸ் போட்டு குடிக்கிறேன்" - ஜாலியாக பேசி பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்!
சால்வையெல்லாம் போடாதிங்கப்பா ஒரு பிரயோஜனமும் இல்ல. அதற்கு பதில் எலுமிச்சம் பழம் கொடுங்க ஜூஸ் போட்டு குடிக்கிறேன் என தேனியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஜாலியாக பேசி பிரச்சாரம் செய்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தேனியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்தனர். அப்போது தங்கதமிழ்செல்வன் "ஏப்பா இந்த சில்க் சால்வையெல்லாம் போடாதிங்கப்பா, ஒரு பிரயோஜனமும் இல்ல.
அதற்கு பதில் புளிப்பு முட்டாய், எலுமிச்சம் பழம் கொடுங்க. இந்த வெயிலுக்கு ஜூஸ் போட்டு குடிச்சுகிறேன். இல்லையென்றால் வாய்ப்பாடு, புத்தகம் என பயனுள்ளதா கொடுங்க. அதனை மற்றவர்களுக்கு கொடுப்பேன்" என ஜாலியாக பேசினார். இதனை கேட்ட பொதுமக்களும், கட்சியினரும் கலகலப்பாக சிரித்தனர். தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.