அடுத்தடுத்து மியான்மரை தாக்கும் நிலநடுக்கங்கள் !
மியான்மரில் இன்று அதிகாலை 3.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த மாதத்தில் ஏற்படும் நான்காவது நிலநடுக்கம் இதுவாகும்.
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடிய நாடு தான் மியான்மர். இந்த மாதத்தின் தொடக்கமான ஜூலை 1 ஆம் தேதி மியான்மரில் பூமிக்கடியில் 135 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருந்தது. இதேபோன்று கடந்த 17 ஆம் தேதியும் பூமிக்கடியில் 80 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவாகியிருந்தது. முன்னதாக, நேற்று மாலை 3 மணியளவில் பூமிக்கடியில் 110 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் மியான்மரில் இன்று அதிகாலை 3.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி, இந்நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 105 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.