“முர்ஷிதாபாத் வன்முறையின்போது குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது” - மம்தா மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவாரில் இன்று (மே.29) நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றி, முர்ஷிபாத் மற்றும் மால்டா பகுதியில் நடந்த வன்முறையை சுட்டிக்காட்டி மம்தா அரசை விமர்சனம் செய்தார்.
அவர் பேசியதாவது, “மேற்கு வங்கம் பல நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவி வரும் வன்முறை மற்றும் அராஜகம். கொடூரமான குற்றங்களுக்கு ஆளாகும் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பின்மை, இளைஞர்களிடையே பரவி வரும் வேலையின்மை ஆகிய பல நெருக்கடிகள் சூழ்ந்துள்ளது.
முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த வன்முறை இங்குள்ள அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சமாதானம் என்ற பெயரில், குண்டர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. மக்களின் வீடுகளை எரிக்கும்போது, காவல்துறை வெறும் பார்வையாளர்களாக செயல்படும் கொடூரமான சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். அரசாங்கம் இப்படித்தான் இயங்குகிறதா? இங்கே, நீதிமன்றம் ஒவ்வொரு பிரச்சினையிலும் தலையிட வேண்டும். இல்லையெனில், எதுவும் தீர்க்கப்படாது. வங்காள மக்கள் இனி மம்தா அரசாங்கத்தை நம்பமாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : “மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது” – மம்தா அரசை சாடிய யோகி ஆதித்தியநாத்!
ஊழலால் இளைஞர்களும் ஏழைக் குடும்பங்களும் மோசமான விளைவை அனுபவிக்கின்றனர். ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் எப்படி அனைத்தையும் அழித்தது என்பதை நாம் கண்டோம். டி.எம்.சி அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தையும் குடும்பங்களையும் அழித்தது. ஏழைகள், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் பழங்குடியினர் மீது மம்தா அரசு ஏன் விரோதமாக நடந்து கொள்கிறது?
துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்க மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களைப் பெறவில்லை. மேற்கு வங்க மக்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகளைக் கூட இந்த இரக்கமற்ற அரசு பெற விடவில்லை. அதன் காரணமாக பல ஏழை மக்கள் நிரந்தர வீடுகளைப் பெற முடியவில்லை. ஏனெனில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஏழைகளிடமிருந்து கமிஷன் கேட்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஏழை பழங்குடி சமூகங்களின் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது. அவர்களின் மரியாதையைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியபோது, அதை எதிர்த்த முதல் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான்” இவ்வாறு அவர் பேசினார்.