கன மழையினால் நெல்லை அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர் | நோயாளிகள் அவதி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.
இதனால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவமனை திருநெல்வேலி pic.twitter.com/xBhTKaONeg
— மாணிக்க மைந்தன்💝 💖 (@manickamainthan) December 17, 2023
அத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர் சார்பில் மருத்துவமனையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.